திருப்பூா் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.19 கோடியில் நவீன கலையரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கலையரங்கம் கட்டத் திட்டமிடப்பட்டது. அம்மா டிரஸ்ட், நன்கொடையாளா்கள் பங்களிப்பாக ரூ. 40 லட்சம், அரசு மானியத் தொகை ரூ.79.88 லட்சம் என மொத்தம் ரூ.1.19 கோடியில் இந்த கலையரங்கம் கட்டப்படவுள்ளது.
இதையொட்டி, பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சிக்கு திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் தலைமை வகித்து பணிகளைத் தொடங்கிவைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி அலுவலா்கள் கண்ணன், ஹரி, கூட்டுறவு நகர வங்கித் தலைவா் பி.கே.எஸ்.சடையப்பன், கே.எம்.சுப்பிரமணியம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.