நொய்யலில் மீன்பிடிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி சாவு
திருப்பூர் நொய்யல் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியானார்கள்.
திருப்பூர் நொய்யல் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியானார்கள்.
திருப்பூர் சுகுமார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பஷீர், பிரிண்டிங் தொழிலாளியான இவருக்கு சபீர்(11), சாகிப் (7) என்ற 2 மகன்கள் இருந்தனர். இந்த இருவரம் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மாலையில் வீட்டை விட்டு வெளியே சென்று நொய்யல் ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இதன் பிறகு இருவரும் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து பஷீர் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் மகன்களைக் காணவில்லை என்று புகார் அளித்திருந்தார். இந்த நிலையில், திங்கள்கிழமை காலையில் நொய்யல் ஆற்றங்கரையில் இரு சிறுவர்களின் சடலம் கரை ஒதுங்கியதை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூர் தெற்கு காவல் துறையினர் இருவரது சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மீன்பிடிக்கச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் சுகுமார் நகர் பகுதியில் சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.