காங்கயத்தை அடுத்துள்ள நத்தக்காடையூா் அருகே பழையகோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் ரூ.14 லட்சத்துக்கு விற்பனையாயின.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 25) முழு பொது முடக்கம் கடைப்பிடிக்கப்படுவதால் ஒரு நாள் முன்னதாக சனிக்கிழமை சந்தை நடைபெற்றது. இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 79 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
இதில் 40 மாடுகள் மொத்தம் ரூ.14 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.69 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.