முகப்பு
திருப்பூர்

குறையும் கரோனா பாதிப்பு: தற்காலிக மருத்துவமனைகள் அகற்றம்

திருப்பூா் மாவட்டத்தில் திருமண மண்டபங்கள், கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கரோனா மருத்துவமனைகளை வருவாய்த் துறையினா் அகற்றி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் திருமண மண்டபங்கள், கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கரோனா மருத்துவமனைகளை வருவாய்த் துறையினா் அகற்றி வருகின்றனா்.

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு வட்டத்திலும் தலா 150 படுக்கை வசதிகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனை திருமண மண்டபங்கள், பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. தற்போது நோயால் பாதிக்கப்படும் நபா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், பள்ளி, கல்லூரிகளில் குறிப்பிட்ட பாடப் பிரிவுகளுக்கான வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன.

இதனிடையே, வரும் திங்கள்கிழமை முதல் கல்லூரிகள் முழுமையாகத் திறக்கப்படவுள்ளதால் மாநகரில் உள்ள 9 தற்காலிக மருத்துவமனைகளை அகற்ற ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் உத்தரவிட்டிருந்தாா்.

இதன் பேரில், வேலாயுதசாமி திருமண மண்டபம், நிஃப்ட்-டீ கல்லூரி, ஏஞ்சல் பொறியியல் கல்லூரி, குமரன் கல்லூரி உள்ளிட்ட 9 தற்காலிக மருத்துவமனைகளை அகற்றும் பணிகளில் வருவாய்த் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

அதேபோல, காங்கயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவிநாசி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள தற்காலிக மருத்துவமனைகள் படிப்படியாக அகற்றப்பட்டு வருவதாக மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.