அவிநாசி, சேவூர் காவல் எல்லைக்கு உள்பட்ட 30 கிராமங்களை கண்காணிக்க சிறப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி காவல் உள்கோட்டத்திற்கு அவிநாசி, சேவூர் உள்பட காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் சட்ட விரோத செயல்கள், குற்றச்சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும், சந்தேகப்படும் படியான நபர்களை உடனடியாக தெரியப்படுத்துவதற்காக கிராமப் பகுதிகளுக்கு சிறப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, அவிநாசி காவல் எல்லைக்கு உள்பட்ட 14 கிராமங்கள், சேவூர் காவல் எல்லைக்கு உள்பட்ட 16 கிராமங்களுக்கும் என மொத்தம் 30 கிராமங்களை கண்காணிக்கும் வகையில் காவலர்கள் நியமிக்கப்பட்டு, மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். மேலும் அந்தந்த பகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ள காவலர்கள் புகைப்படம், அவர்களது செல்லிடப் பேசி எண்ணுடன் கூடிய தகவல் பெயர் பலகை திறக்கப்பட்டது.
இதன் மூலம் பொதுமக்கள் உடனடியாக அந்தந்த காவலர்களுக்கு குற்றச்சம்பங்களைத் தெரியப்படுத்தி பாதுகாத்துக் கொள்ளலாம். இந்நிகழ்ச்சி துவக்கமாக பழங்கரை, சேவூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கர், ஆய்வாளர் அருள், உதவி ஆய்வாளர்கள் செந்தில், அன்பரசு, காவலர்கள் மயில்சாமி, கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.