நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்! முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!!
திருச்சி ரயில்வே மேலாளர் அலுவலக நுழைவு வாயிலுக்கு வாயில் நுழையாத பெயர் வைத்திருப்பதாக மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளதைப் பற்றி...
திருச்சி ரயில்வே மேலாளர் அலுவலக நுழைவு வாயிலுக்கு வாயில் நுழையாத பெயர் வைத்திருப்பதாக மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு “கர்தவ்ய த்வார்” என தெற்கு ரயில்வே ஹிந்தியில் பெயர் வைத்திருப்பது பல்வேறு தரப்பினரிடையே கடும் எதிர்ப்பை பெற்றுள்ளது. மார்க்சிய கம்யூனிஸ்ட் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
“கர்தவ்ய த்வார்” என்றால் தமிழில் “கடமையின் நுழைவுவாயில்” என்று பொருள். பாஜக அரசின் தற்போதைய ஒரே கடமை “இந்தித் திணிப்பு” மட்டுமே. தெற்கு ரயில்வே உடனடியாக இந்தி பெயரை நீக்கி தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினும் நுழைவு வாயிலின் பெயரை ஹிந்தியில் சூட்டியதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பு: நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்!
இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பா.ஜ.க.! 'மொழி ஒன்று - வரிவடிவம் மூன்று' எனும் வகையில் இந்திப் பெயரையே தமிழ், ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இழிவான ஹிந்தித் திணிப்பு செயலில் இறங்கியுள்ளது மத்திய பா.ஜ.க. அரசு!
திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என எழுதி வைத்துள்ளனர். வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் ஏற்கெனவே 'பவிஷ்ய நிதி பவன்' என்ற பெயரைத் திணித்து விட்டனர்.
குற்றவியல் சட்டங்களுக்கும் சமஸ்கிருதப் பெயரைத்தான் ஆங்கில வரிவடிவத்தில் எழுதுகின்றனர். மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் பெயர் 'ஜல் சக்தி' ஆகிவிட்டது. மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திலும் இதே வேலையைத்தான் காட்டினார்கள்.
கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது. தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்கும் இவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும்!
தமிழ், ஆங்கிலப் பெயர்களிலும் ஹிந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு, உடனடியாக அங்கு சரியான தமிழ்ப் பெயர்கள் இடம்பெற வேண்டும். இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை மத்திய பா.ஜ.க. அரசு உணர வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Chief Minister Stalin's condemnation of the central government for having an uninviting name on the entrance gate of the Trichy Railway Manager's office
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.