வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே உத்தமபாளையம் வட்டமலை அணையில் சமூக நல அமைப்புகள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் நடைபெற்றது.
போதுமான நீர்வரத்து இல்லாத இடத்தில் அணை கட்டப்பட்டதால், கடந்த 30 வருடங்களாக அணை வறண்டே கிடக்கிறது. அணை கட்டப்பட்ட பிறகு இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால், விவசாயிகள் மற்றும் திருப்பூரைச் சேர்ந்த 30 சமூக நல அமைப்புகள் ஒருங்கிணைந்து, அணைக்கு அருகிலுள்ள அமராவதி ஆற்றிலிருந்து உபரி நீரைக் கொண்டு வந்து அணையை நிரப்பவும், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டு வரவும் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அணை மேம்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வரும் 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்து அணையில் தேசியக் கொடியேற்றவும், அணையைத் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.