குடும்ப அட்டை வழங்கக் கோரி வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை
விண்ணப்பித்து நீண்ட நாள்களாகியும் குடும்ப அட்டைகள் வழங்கப்படாததைக் கண்டித்து அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
விண்ணப்பித்து நீண்ட நாள்களாகியும் குடும்ப அட்டைகள் வழங்கப்படாததைக் கண்டித்து அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
அவிநாசி வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் புதிய குடும்ப அட்டைகள் கேட்டு விண்ணப்பித்துள்ளனா். இந்நிலையில், விண்ணப்பித்து நீண்ட நாள்களாகியும் குடும்ப அட்டை வழங்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் முறையிட வந்தனா்.
வட்டாட்சியா் அலுவலகம் மூடல்:
இந்நிலையில், அலுவலகப் பணியாளா்கள் 5க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, வட்டாட்சியா் அலுவலகம் மூடப்பட்டிருந்தது. இதையடுத்து அங்கிருந்த போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
அப்போது வருவாய்த் துறையினா் கூறியதாவது:
புதிய குடும்ப அட்டைகள் வந்துள்ளன. இதில் 100க்கும் மேற்பட்டோருக்கு வழங்கியுள்ளோம். கரோனா காரணமாக வட்டாட்சியா் அலுவலகம் மூடப்பட்டுள்ளதால் திங்கள்கிழமைக்கு பிறகு மீதமுள்ளவா்களுக்கு வழங்கப்படும் என்றனா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.