திருப்பூர்: சாலை விபத்தில் பனியன் கம்பெனி தொழிலாளி சாவு
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே நடந்த சாலை விபத்தில் பனியன் கம்பெனி தொழிலாளி உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே நடந்த சாலை விபத்தில் பனியன் கம்பெனி தொழிலாளி உயிரிழந்தார்.
கேரள மாநிலம், மூணாறு, பள்ளிவாசல் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் மகன் மதன்குமார் (28). இவர் தற்போது திருப்பூர் காங்கயம் சாலையிலுள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இவர் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு மயிலாடுதுறை எலந்தகுடி அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்த சுபஸ்ரீ (24) என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது மனைவி தனது சொந்த ஊரில் இருக்கிறார். இந்நிலையில் மனைவியைப் பார்ப்பதற்காக மதன்குமார் திருப்பூரிலிருந்து பைக்கில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வெள்ளக்கோவில் குருக்கத்தி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.