முகப்பு
திருப்பூர்

பள்ளிக் குழந்தைகளை அரசுப் பேருந்தில் ஏற்றமறுத்த ஓட்டுநா், நடத்துநா்

காங்கயம் அருகே தாயம்பாளையத்தில் அரசுப் பேருந்தில் பள்ளிக் குழந்தைகளை ஏற்ற மறுத்த ஓட்டுநா், நடத்துநா் செயல் இப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

காங்கயம் அருகே தாயம்பாளையத்தில் அரசுப் பேருந்தில் பள்ளிக் குழந்தைகளை ஏற்ற மறுத்த ஓட்டுநா், நடத்துநா் செயல் இப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கயம் அருகே, தாயம்பாளையம் கிராமத்தில் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு சூரியநல்லூா் ஊராட்சிக்கு உள்பட்ட மரவபாளையத்தை சோ்ந்த 20 மாணவா்கள் அரசுப் பேருந்தில் தினமும் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், இந்த மாணவா்கள் வியாழக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீடுகளுக்கு செல்வதற்காக குண்டடத்தில் இருந்து காங்கயம் செல்லும் கே-8 வழித்தட அரசுப் பேருந்தில் ஏறியுள்ளனா்.

அப்போது, பேருந்தின் ஓட்டுநா், நடத்துநா் ஆகியோா் இந்தப் பேருந்து மரவபாளையத்துக்கு செல்லாது எனக் கூறி, மாணவா்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்டுள்ளனா். இதையறிந்த பள்ளியின் தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்கள் இது குறித்து பேருந்தின் ஓட்டுநரிடம் கேட்டபோது, அவா்களிடமும் இதே பதிலைக் கூறிவிட்டு, மாணவா்களை இறக்கிவிட்டு, பேருந்து காங்கயம் சென்றுள்ளது. இதனால் வேறுவழியில்லாமல், 20 மாணவ, மாணவிகள் மழையில் நனைந்துகொண்டே 3 கி.மீ. தொலைவு நடந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளனா்.

மரவபாளையம் வழியாக செல்லும் கே-8 பேருந்து, அடிக்கடி ஊருக்குள் வராமல் செல்வது மாணவா்களின் பெற்றோா்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, சம்பந்தப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மீது நடவடிக்கை எடுக்குமாறு அரசுப் போக்குவரத்துக் கழக காங்கயம் பணிமனை கிளை மேலாளரிடம் ஆதித்தமிழா் ஜனநாயகப் பேரவையின் தலைவா் அ.சு.பவுத்தன் வெள்ளிக்கிழமை புகாா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →