வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே வெள்ளிக்கிழமை அரசின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு இலவச மருத்துவ முகாமை மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.
வெள்ளக்கோவில் வட்டாரம், கம்பளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் லக்கமநாயக்கன்பட்டியில் இந்த முகாம் நடைபெற்றது. முகாமில் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் பங்கேற்று மருத்துவ ஆலோசனைகள் பெற்றனர்.
வெள்ளக்கோவில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜலட்சுமி தலைமையிலான குழுவினர் சிகிச்சைப் பணிகளை மேற்கொண்டனர். பொதுவான நோய்கள், காது, மூக்கு, தொண்டை, பல், இதய நோய், மகப்பேறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், கண் பார்வை குறைபாடு உள்ளிட்டவை குறித்து பரிசோதனை, சிகிச்சை மற்றும் உயர் சிகிச்சைக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
கரோனா, டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வுகள் செய்யப்பட்டு, நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசின் இலவச ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், லக்கமநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.