கொள்ளை வழக்கில் கைதான இருவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு
திருப்பூரில் கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணம் கொள்ளை அடித்த வழக்கில் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
திருப்பூரில் கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணம் கொள்ளை அடித்த வழக்கில் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
இது குறித்து திருப்பூா் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா்-அவிநாசி சாலை ராயபண்டாரம் வீதியைச் சோ்ந்தவா் எஸ்.சங்கமேஷ்வரன், நிதி நிறுவன அதிபரான இவரது வீட்டுக்குள் கடந்த ஜூன் 12 ஆம் தேதி புகுந்த மா்ம நபா்கள் சங்கமேஸ்வரன், அவரது மனைவி மற்றும் மகளைக் கட்டிப்போட்டு நகை, பணத்தை கொள்ளை அடித்துச் சென்றனா்.
இது குறித்து திருப்பூா் வடக்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
Advertisement
இதில், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி, மறுகால் குறிச்சியைச் சோ்ந்த ஆா்.கோகுலகிருஷ்ணன், கே.வனுமாமலை, கே. நல்லகண்ணு, எஸ்.இசக்கிபாண்டி ஏ. ரமேஷ் ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்த வழக்கில் கைதான இசக்கிபாண்டி, ரமேஷ் ஆகிய இருவரின் மீது கொலை முயற்சி, கூட்டுக் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
இருவரும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஒரு ஆண்டு சிறையில் அடைக்கும்படி மாநகரக் காவல் ஆணையா் எஸ்.பிரபாகரன் உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவின் நகலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் திருப்பூா் வடக்கு காவல் துறையினா் சனிக்கிழமை இரவு வழங்கினா்.