முகப்பு
திருப்பூர்

குன்னத்தூர் அருகே மகப்பேறு மருத்துவர் இல்லாமல் சிகிச்சை: தனியார் மருத்துவமனை மகப்பேறு பிரிவுக்கு சீல்

குன்னத்தூர் அருகே பிரசவத்தின் போது பெண் உயிரிழப்பிற்கு பிறகும், மகப்பேறு மருத்துவர் இல்லாமல், பிரசவம், கருக்கலைப்பு

Updated On : 18 மார்ச் 2022, 1:56 pm IST
தனியார் மருத்துவமனை மகப்பேறு பிரிவை மூடி சீல் வைக்கும் அதிகாரிகள்.
பகிர்:

அவிநாசி: குன்னத்தூர் அருகே பிரசவத்தின் போது பெண் உயிரிழப்பிற்கு பிறகும், மகப்பேறு மருத்துவர் இல்லாமல், பிரசவம், கருக்கலைப்பு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்த தனியார் மருத்துவமனை மகப்பேறு பிரிவுக்கு வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட இணை இயக்குநர், சுகாதாரப்பணிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குன்னத்தூர்-செங்கப்பள்ளி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் இன்றி பேறுகால முன் கவனிப்பு, பிரசவம், அறுவை சிகிச்சை, கருக்கலைப்பு, பேறுகால பின் கவனிப்பு ஆகியவை நடைபெறுவது தெரியவந்தது.

ஏற்கனவே இம்மருத்துவமனையில், கடந்த 2021 டிசம்பர் 7ஆம் தேதி திருப்பூர் மேட்டுக்கோயில் பகுதியைச் சேர்ந்த சிலுவை பிரகாசி என்பவர் பிரசவத்தின் போது உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து மார்ச் 7ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், மகப்பேறு மருத்துவர் இல்லாமல் மகப்பேறு தொடர்பான சிகிச்சைகள் ஏதும் மேற்க்கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. 

Advertisement

Advertisement

இருப்பினும் தற்போது மேற்கொண்ட ஆய்வில், தனியார் மருத்துவமனை மருத்துவர் விஸ்வநாதன், மகப்பேறு மருத்துவர் நியமிக்காமல் அவரே மகப்பேறு சிகிச்சை, கருக்கலைப்பு செய்து வருவது தெரியவந்தது. இனியும், உரிய மருத்துவர் இல்லாமல் சிகிச்சை அளிக்கக்கூடாது. மருத்துவர் விஸ்நாதன் கல்வித் தகுதிகேற்ப பொது மருத்துவ சிகிச்சை மட்டுமே வழங்க வேண்டும். 

அதுவரை இம்மருத்துவமனை பிரசவப் பகுதி முட உத்தரவிடப்படுகிறது. தவறினால் மருத்துவமனை சான்றிதழ் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளனர். மேலும் தனியார் மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரசவப் பிரிவுக்கு சீல் வைக்கப்பட்டது. பிரசவத்தின் போது பெண் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகும், மகப்பேறு மருத்துவர் இல்லாமல் சிகிச்சை அளித்து வந்த சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.