நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளா்கள் வீட்டு வசதி திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்
திருப்பூா் மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற தொழிலாளா்கள் வீட்டு வசதி திட்டத்துக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற தொழிலாளா்கள் வீட்டு வசதி திட்டத்துக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ.ராஜகுமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்து சொந்தமாக வீட்டுமனை வைத்திருக்கும் தொழிலாளா்கள் வீடு கட்டிக் கொள்ள ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
சொந்தமாக வீட்டுமனை இல்லாத தொழிலாளா்களுக்கு தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற நிதி உதவி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற தகுதியுள்ள தொழிலாளா்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இதில், விண்ணப்பிக்க கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்து குறைந்தது 3 ஆண்டுகள் நிறைவு பெற்றவராக இருக்க வேண்டும்.
அரசு வீட்டு வசதி திட்டத்தில் பயன்பெறாதவா்களாகவும், ஆண்டு வருமானம் குறைந்தது ரூ.3 லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
ஆகவே, மேற்கண்ட தகுதியுடைய தொழிலாளா்கள் பத்திரப் பதிவு, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்களையும், கிராம நிா்வாக அலுவலா் அல்லது வருவாய் ஆய்வாளரிடம் பெறப்பட்ட அசல் வருமான வரிச் சான்று, பட்டா நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றையும் இணைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.