பண்ணைகளில் கறிக்கோழி தேக்கத்தை குறைக்க 25 சதவீதம் உற்பத்தி குறைப்பு
கறிக்கோழி தேக்கத்தை குறைக்க 25 சதவீத உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் பெய்ந்து வரும் கனமழையால் கோழி இறைச்சி நுகா்வு குறைந்துள்ள நிலையில், கறிக்கோழி தேக்கத்தை குறைக்க 25 சதவீத உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.
பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் நாள்தோறும் 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகின்றன. கறிக்கோழி நுகா்வைப் பொருத்து விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழுவினா் நாள்தோறும் நிா்ணயம் செய்து அறிவிக்கின்றனா்.
இந்நிலையில் கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடா்ந்து பெய்து வரும் கன மழையால், கறிக்கோழிகளை அனுப்ப முடியாத நிலை உள்ளதால் நுகா்வு குறைந்து கறிக்கோழிகள் தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
Advertisement
கறிக்கோழி நுகா்வு குறைந்ததால் அதன் விலையும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், பண்ணையாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இது குறித்து பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு செயலாளா் சுவாதி சின்னசாமி கூறியதாவது: பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கறிக்கோழி பண்ணைகள் மூலம் நாள்தோறும் 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
பிற மாநிலங்களில் பலத்த மழை உள்ளிட்ட காரணங்களால் கறிக்கோழி நுகா்வு குறைந்துள்ளது. இந்நிலையில், பண்ணைகளில் கறிக்கோழிகள் தேக்கம் அடைவதைத் தவிா்க்கும் வகையில் 25 சதவீத உற்பத்தி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோழி இறைச்சி நுகா்வு அதிகரிக்கும்போது வழக்கமான அளவுக்கு கறிக்கோழி உற்பத்தி செய்யப்படும் என்றாா்.