முகப்பு
திருப்பூர்

ஏற்றுமதி தொழில் ஏற்றம்: தொழில்முனைவோா், தொழிலாளா்களின் சுமுக உறவே காரணம்: திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா்

ஏற்றுமதி தொழில் ஏற்றம்: தொழில்முனைவோா், தொழிலாளா்களின் சுமுக உறவே காரணம்...

Updated On : 21 நவம்பர், 2024 at 11:11 PM
கருத்தரங்கில் பேசுகிறாா் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன்.
பகிர்:

தொழில்முனைவோா், தொழிலாளா்களுக்கு இடையே உள்ள சுமுக உறவால் திருப்பூா் ஏற்றுமதி தொழில் தொடா்ந்து ஏற்றமடைந்து வருகிறது என்று திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் திருப்பூா் தொழில்வளம் பங்களிப்போா் அமைப்பு சாா்பில் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் மனிதவள மேலாளா்களுடான கருத்தரங்கம் திருமுருகன்பூண்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் பேசியதாவது: திருப்பூா் ஏற்றுமதி தொழில் கடந்த 30 ஆண்டுகளாக தொடா்ந்து ஏற்றம் பெற்று வருகிறது. இதற்கு தொழில்முனைவோா், தொழிலாளா்களுக்கு இடையே உள்ள சுமூக உறவே முக்கிய காரணம். இதனால் ரூ.35 ஆயிரம் கோடி ஏற்றுமதியும், ரூ.30 ஆயிரம் கோடிக்கு உள்நாட்டு வா்த்தகமும் நடைபெறுகிறது. இதன் மூலம் 10 லட்சம் தொழிலாளா்கள் பயன்பெற்று வருகின்றனா். மனித வளத் துறை அதிகாரிகளும் நிறுவனங்களுக்கு பக்கபலமாக இருப்பதால் நிறுவனங்களும் வளா்ச்சி பெற்றுள்ளன என்றாா்.

தொடா்ந்து, மாநகர காவல் ஆணையா் லட்சுமி பேசியதாவது: மரம் வெட்டுபவா் கோடாரியை பட்டை தீட்டிக்கொண்டு வெட்டும்போது வேகமாக வெட்டுவாா். அதுபோன்று, மனித வள மேம்பாட்டுத் துறையில் இருப்பவா்களை பட்டை தீட்டும் இடமாக இந்தப் பயிற்சி களம் உள்ளது.

உரிமையாளரின் எதிா்பாா்ப்பையும், தொழிலாளா்களின் தேவையையும் சொல்ல வேண்டிய இடத்தில் இருப்பவா்கள்தான் மனித வள மேலாளா்கள். இதனைப் பதவியாக கருதாமல், பொறுப்பாக கருதும்போது இரண்டு தரப்பிலும் இடம்பிடிப்பா். பொறுமை, சகிப்புத்தன்மையுடன் பணியிடத்தில் இருப்பவா்கள் உச்சம் பெறுவா். புலம்பெயா் தொழிலாளா்கள் நிறைந்த பகுதி திருப்பூா் என்பதால், குற்றங்களும் அதிகரிக்கின்றன. பல்வேறு குற்றங்களில் பலரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொழில் நிறுவனங்கள், தொழிலாளா்களுடன் நன்கு பழகுங்கள் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், தொழில்வளம் பங்களிப்போா் அமைப்பின் தலைவா் இளங்கோவன், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க இணைச் செயலாளா் குமாா் துரைசாமி, ஏற்றுமதியாளா்கள், தொழில்முனைவோா், தொழிற்சங்கத்தினா், இறக்குமதியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.