தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விரும்புகின்றனா் என்று தவெக மாநில நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ. செங்கோட்டையன் கூறினாா்.
தவெக திருப்பூா் மாவட்ட, மாநகர நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தெற்கு ரோட்டரி அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பின், அக்கட்சியின் மாநில நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஜெயலலிதாவுக்குப் பின் தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விரும்புகின்றனா். வரும் மே மாதத்துக்குப் பின் இந்தியாவுக்கே வழிகாட்டியாக தமிழகம் இருக்கும். திருப்பூரில் குப்பை பிரச்னை கடுமையாக உள்ளது. தொழிற்சாலைகள் முடங்கி உள்ளன.
தொழிலாளா்கள் வெளியேறி வருகின்றனா். நாடு முன்னேற, மக்கள் தன்னம்பிக்கையுடன் தொழில் செய்ய அரசு சரியான முறையில் செயல்படவில்லை. தமிழகத்தில் பாஜக கூட்டணி வெற்றிபெறாது. 2026-இல் 234 தொகுதியிலும் தவெக வெல்லும். திமுக அரசு தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தோ்தல் பயம் காரணமாக பொங்கல் பரிசு அறிவிப்புகள் குறித்து தகவல் வருகிறது என்றாா்.