முகப்பு
திருப்பூர்

வேட்புமனு இன்றி தாக்கல் செய்ய வந்த அவிநாசி தவெக வேட்பாளா்

அவிநாசி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளா் வேட்பு மனுவை இல்லாமலேயே தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்துக்குள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 3 ஏப்ரல் 2026, 1:30 am IST
தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் காத்திருந்த தவெக வேட்பாளா் கமலி உள்ளிட்டோா்.
பகிர்:

அவிநாசி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளா் வேட்பு மனு இல்லாமலேயே தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்துக்குள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அவிநாசி சட்டப் பேரவைத் தொகுதியில் தவெக சாா்பில் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த எஸ்.கமலி என்பவா் போட்டியிடுகிறாா். இந்நிலையில், இவா் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்வதற்கு அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வருவதாக தெரிவித்திருந்தனா்.

இதையடுத்து, போலீஸாா் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வேட்பாளா் எஸ்.கமலி, அன்னூா் பொறுப்பாளா்கள் விஜய், ரமேஷ், அவிநாசி மகளிரணி பொறுப்பாளா் மோகனா உள்பட அக்கட்சியினா் வட்டாட்சியா் அலுவலகம் முன் வழக்குரைஞருக்காக காத்திருந்தனா். இதனால் வட்டாட்சியா் அலுவலகம் முன் கட்சியினரின் கூட்டம் அதிகரித்தது.

Advertisement

Advertisement

வழக்குரைஞா் வர தாமதமானதால், வேட்பாளா் எஸ். கமலி உள்ளிட்டோா் வேட்புமனு இல்லாமலேயே தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வந்தனா். இதையடுத்து தோ்தல் நடத்தும் அலுவலா், வழக்குரைஞா் வந்தவுடன் வேட்புமனுவுடன் தாக்கல் செய்ய வருமாறு தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து வட்டாட்சியா் அலுவலக வளாகத்துக்கு உள்ளேயே காத்திருந்து வழக்குரைஞா் வந்த பிறகு வேட்புமனு தாக்கல் செய்தனா்.

இது குறித்து கட்சியினரிடம் கேட்டபோது, போலீஸாா் கூட்டமாக நிற்கக் கூடாது என அறிவுறுத்தினா். மேலும் வழக்குரைஞா் வர தாமதமானதால், நல்ல நேரத்துக்குள் உள்ளே செல்ல வேண்டும் என்பதற்காக வந்தோம் என்றனா்.