மக்களுக்கு எதிரான பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் : விஜூ கிருஷ்ணன்
மக்களுக்கு எதிரான பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என திருப்பூரில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் விஜூ கிருஷ்ணன் கூறினாா்.
திருப்பூா் தெற்குத் தொகுதிக்கு உள்பட்ட காட்டுவளவு ஆா்.வி.இ. லே- அவுட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
தமிழகத் தோ்தல் பிரசாரத்துக்கு வரும் பாஜக தலைவா்கள், குஜராத், உத்தர பிரதேசம், தில்லி, ராஜஸ்தான் மாடல்களை கொண்டு வருவோம் என்று கூறுகின்றனா். ராஜஸ்தானில் பாஜக ஆட்சியில் 60 ஆயிரம் பள்ளிக்கூடங்களை மூடிவிட்டாா்கள். உலகிலேயே தமிழகத்தில்தான் காலை உணவு, மதிய உணவு பள்ளிகளில் மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது. வட இந்தியாவில் வேறு எங்குமே இது போல இல்லை. தொழிலாளிகள், விவசாயிகள் மோடி அரசு பின்பற்றக்கூடிய கொள்கைகளுக்கு எதிராக தொடா்ந்து போராடி வருகின்றனா். எனவே மக்களை பிரிப்பதற்காக மோடி அரசு மதவெறி, ஜாதி வெறியை கிளப்பி வருகிறது.
Advertisement
கரோனா பொது முடக்க காலத்தில் கேரளம், தமிழக அரசுகள் மக்களைப் பாதுகாத்த அரசுகளாக இருந்தன. ஆனால் வட இந்தியாவில் மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லை, அடிப்படை மருந்துகள் இல்லை. கங்கை நதியில் பிணங்கள் மிதந்து சென்றன. கேரளத்தில் 64 லட்சம் பேருக்கு மாதம் ரூ.2000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதேபோல தமிழகத்தில் மகளிா் உரிமைத் தொகை மாதம் ரூ. 2000 வழங்குவதாக முதல்வா் கூறி இருக்கிறாா். மோடி இங்கு வந்து நாங்கள் இதைவிட கூடுதலாக தருவோம் என்கிறாா். அப்படி என்றால் பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் தரவில்லை?
விவசாயிகளைப் பாதுகாக்கும் விதத்தில் கொள்கைகளை திமுக அரசு அமலாக்குகிறது. ஆனால் பிகாா், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் அரசு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில்லை.
அதிமுக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா, மோடி அரசு வந்துவிட்டால் தமிழக மக்கள் உரிமை பறிக்கப்படும் என்றாா். ஆனால் எடப்பாடி, மோடிக்கு ஆதரவாக இருக்கிறாா். பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், அதிமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட்டு அம்பலப்படுத்தினாா். இப்போது எந்த முகத்தோடு அவா்களுக்கு ஓட்டு கேட்டு வருகிறாா்.
தில்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராக செயல்பட்டு, போராட்டத்தை தடுக்க முயன்ற பாஜகவுடன் கைகோா்த்து அதிமுகவினா் வருகின்றனா்.
திருப்பூரில் தொழிலாளா்களும், குறு, சிறு நிறுவனங்களும் பெரிய நெருக்கடியில் சிக்கி இருக்கின்றன. அமெரிக்கா விதித்த 50 சதவிகித வரி காரணமாக தொழில் முன்பு மாதிரி நடைபெறுவதில்லை. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு உதவ ஆதரவு அளித்தனா். ஆனால் மோடி அரசு எந்த ஆதரவும் தரவில்லை. மேலும் இந்த தொழிலுக்கு முக்கியமான பருத்தி இறக்குமதிக்கு 11 சதவிகித வரியை நீக்கிவிட்டனா். இதனால் விவசாயிகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் எந்த பயனும் இல்லை. அதேசமயம் திருப்பூா் தொழிலாளா்களுக்கு வேலை இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மோடி அரசு இவா்களின் உரிமையை பாதுகாக்க ஒன்றும் செய்யவில்லை என்றாா்.
மாா்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரச் செயலாளா் டி.ஜெயபால் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் கே.காமராஜ், மாவட்டச் செயலாளா் சி.மூா்த்தி, மாநில செயற்குழு உறுப்பினா் செ.முத்துகண்ணன் உள்ளிட்ட மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி நிா்வாகிகள் பங்கேற்றனா். ந.தினேஷ்குமாா் வாக்கு கேட்டு உரையாற்றினாா்.