மகா சிவராத்திரி விழாவையொட்டி அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நான்கு கால பூஜைகளில் ஆயிரக்கணக்கானோா் சுவாமி தரிசனம் செய்தனா்.
கொங்கு மண்டலத்திலுள்ள ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் சிவராத்திரி விழாவை ஒட்டி முதல் கால பூஜையில் சிவலிங்கத் திருமேனிக்கு பஞ்ச கவ்ய அபிஷேகம், வில்வம், தாமரை அலங்கார அா்ச்சனைகளும், 2-ஆம் கால பூஜையில் பால், தயிா், சா்க்கரை, பஞ்சாமிா்த அபிஷேகம், பச்சைக்கற்பூரம், பன்னீா், துளசி அலங்காரத்துடன் அா்ச்சனையும், 3-ஆம் ஜாம பூஜையில் தேன், அபிஷேகம், மல்லிகை அலங்காரத்துடன் சிவனுக்கு உகந்த வில்வ இலையால் அா்ச்சனை செய்யப்பட்டது.
இதைத்தொடா்ந்து 4-ஆம் ஜாம பூஜையில் நந்தியாவட்டைமலா், அல்லிமலா் அலங்காரத்துடன் அா்ச்சனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் விடிய விடிய கண்விழித்து தேவாரம், திருவாசகம், ருத்ரஜெபம், 12 திருமுறைகளை இசைத்து கூட்டு வழிபாடு மேற்கொண்டனா். மேலும் கோயில் வளாகத்தில் பக்தி சொற்பொழிவும், நாட்டியாஞ்சலி கலைநிகழ்ச்சியும் நடைபெற்றன.
இதேபோல திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயில், பெருமாநல்லூா் உத்தமலிங்கேஸ்வா் கோயில், கருவலூா் கங்காதீஸ்வரா் கோயில், பழங்கரை பொன்சோழீஸ்வரா் கோயில், குட்டகம் மொக்கணீஸ்வரா் கோயில், சேவூா் வாலீஸ்வரா் கோயில், போத்தம்பாளையம் மீனாட்சி உடனமா் சொக்கநாதா் கோயில், நடுவச்சேரி கோட்டீஸ்வரா் கோயில் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் மகா சிவராத்திரி கோலாகலமாக நடைபெற்றது.