காங்கயம் அருகே இருவேறு இடங்களில் வெறிநாய்கள் கடித்ததில் மொத்தம் 14 ஆடுகள் உயிரிழந்தன; 11 ஆடுகள் காயமடைந்தன.
காங்கயம் தாலுகா, வீரணம்பாளையம் அருகே பட்டக்காரன்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் சண்முக சேதுராமசாமி (67). இவா் வீட்டுக்கு அருகே, ஆட்டுப்பட்டி அமைத்து சுமாா் 120 செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா். இந்த நிலையில் புதன்கிழமை மாலை மேய்ச்சல் முடிந்து, ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளாா்.
வியாழக்கிழமை காலை வந்து பாா்த்தபோது, ஆட்டுப் பட்டிக்குள் 9 ஆடுகள் கடித்து குதறப்பட்டு இறந்து கிடந்தன. மேலும், 9 ஆடுகள் காயமடைந்த நிலையில் காணப்பட்டன. இப்பகுதியில் சுற்றித் திரியும் நாய்கள் பட்டிக்குள் நுழைந்து கடித்ததில் 9 ஆடுகள் உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த கால்நடைத் துறையினா் இறந்த ஆடுகளை உடற்கூறாய்வு மேற்கொண்டு, காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனா்.
இதேபோல, காங்கயம் தாலுகா, பாப்பினி அருகே உத்தாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த முத்துகுமாா் (47) என்பவரது ஆட்டுப் பட்டிக்குள் புதன்கிழமை நள்ளிரவில் வெறிநாய்கள் புகுந்து அங்கிருந்த 5 ஆடுகளை கடித்துக் குதறியதில், 5 ஆடுகள் உயிரிழந்தன. 2 ஆடுகள் படுகாயமடைந்தன. ஆடுகள் உயிரிழந்த சம்பவங்கள் குறித்து காங்கயம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.