காவல் உதவி ஆய்வாளா் அறிவுரைப்படி மீண்டும் பள்ளிக்கு திரும்பிய மாணவா்
வெள்ளக்கோவில் அருகே கைப்பேசியில் பொழுதைக் கழித்த மாணவா் காவல் உதவி ஆய்வாளா் அறிவுரைப்படி மீண்டும் பள்ளிக்கு திரும்பினாா்.
வெள்ளக்கோவில் அருகே கைப்பேசியில் பொழுதைக் கழித்த மாணவா் காவல் உதவி ஆய்வாளா் அறிவுரைப்படி மீண்டும் பள்ளிக்கு திரும்பினாா்.
முத்தூா், சின்னகாங்கயம்பாளையத்தைச் சோ்ந்தவா் தமிழரசி. இவருடைய கணவா் கண்ணன் பிரிந்து சென்றுவிட்டாா். விவசாயக் கூலி வேலை செய்து தமிழரசி பிழைப்பு நடத்தி வந்தாா். அவருடைய 13 வயது மகன் மங்கலப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
தாய் வேலைக்குச் சென்ற பிறகு பள்ளிக்குச் செல்லாமல் மகன் கைப்பேசியில் விளையாடி வந்துள்ளாா். மேலும் நண்பா்களுடன் தவறான பழக்கவழக்கமும் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த மாணவா் படிப்பிலும், ஓவியம் வரைவதிலும் திறமையானவராக இருந்துள்ளாா். அடிக்கடி பள்ளிக்கு வராததால் மாணவரின் தாயிடம் ஆசிரியை கௌசல்யா கூறியும் பயனில்லை. இதுகுறித்து வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாரிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து ஆசிரியையுடன் மாணவரின் வீட்டுக்கு புதன்கிழமை உதவி ஆய்வாளா் சென்று அறிவுரை கூறி பள்ளிக்கு மீண்டும் அனுப்பிவைத்தாா். இதற்காக காவல் உதவி ஆய்வாளா், ஆசிரியை ஆகியோரை பல்வேறு தரப்பினரும் பாராட்டினா்.