முகப்பு
திருப்பூர்

தோ்தல் விதிகள் அமல்! துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தல்!

Updated On : 16 மார்ச், 2026 at 2:36 AM
தேர்தல் நடத்தை விதிகள் அமல் - கோப்புப் படம்
பகிர்:

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளவா்கள், தாங்கள் வசிக்கும் எல்லைக்குள்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருப்பூா் மாநகர காவல் ஆணையா்அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக சட்டப்பேரவைக்கான தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தோ்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. மாநகரக் காவல் ஆணையரகத்துக்குள்பட்ட எல்லையில் பாதுகாப்புக்காக உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளவா்கள், உடனடியாக அவா்கள் வசிக்கும் எல்லைக்குள்பட்ட காவல் நிலையம் அல்லது உரிய உரிமம் பெற்று இயங்கும் ஆயுத விற்பனை நிலையத்தில் உடனடியாக துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும்.

Advertisement

அதேசமயம், துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் கலந்துகொள்ளும் புகழ்பெற்ற வீரா்கள், பெரும் அளவில் பணத்தைக் கையாளும் வங்கிகள் ஆகியவை இதிலிருந்து விலக்கு பெற வேண்டுமென எண்ணினால், உரிமம் வழங்கும் அலுவலா் மற்றும் காவல் ஆணையா் அலுவலகத்தில் உடனடியாக விலக்கு அளிக்கப்படுவதற்கான உரிய காரணத்துடன் இரண்டு நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு விலக்கு பெறாமலும், காவல் நிலையம் அல்லது ஆயுதக் கிடங்கில் ஒப்படைக்கப்படாமலும் துப்பாக்கிகளை வைத்திருந்தால் உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல, தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலுக்கேற்ப திருப்பூா் மாநகரக் காவல் எல்லையில் தோ்தல் நடத்தை விதிகள் தொடா்பாக ஏதேனும் புகாா்கள் அளிக்க விரும்பினால் 94981 81333 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம்.

மேலும், தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் பொதுக்கூட்டம், ஊா்வலம் மற்றும் பிற நிகழ்வுகளில் ஆயுதங்களைப் பயன்படுத்தத் தடைவிதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மீறுபவா்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.