முகப்பு
திருப்பூர்

தேக்கமடைந்து நஷ்டத்தை தவிா்க்கும் வகையில் பல்லடத்தில் கறிவேப்பிலை பவுடா் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

Updated On : 15 மார்ச், 2026 at 6:49 PM
பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கறிவேப்பிலை. ~ஈஸ்வரமூா்த்தி
பகிர்:

தேக்கமடைந்து நஷ்டத்தை தவிா்க்கும் வகையில் பல்லடத்தில் கறிவேப்பிலை பவுடா் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

திருப்பூா் மாவட்டம் பல்லடம், பொங்கலூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரம் ஏக்கருக்கும் மேலாக கறிவேப்பிலை சாகுபடி நடைபெற்று வருகிறது. குறைந்த அளவு தண்ணீா் தேவை, தொடா்ந்து வருமானம் கிடைக்கும் என்பதால் கறிவேப்பிலை விவசாயத்தில் விவசாயிகள் பலா் ஈடுபட்டுள்ளனா். ஆனால், கறிவேப்பிலையின் விற்பனை விலை நிரந்தரம் இல்லை. திருமணம் மற்றும் முகூா்த்த காலங்களில் நல்ல விலை கிடைக்கும். அதன் பிறகு உரிய விலை கிடைக்காது.

பல்லடம், பொங்கலூா் வட்டாரப் பகுதியில் அறுவடை செய்யப்படும் கறிவேப்பிலை கோவை, மேட்டுப்பாளையம், ஈரோடு, சென்னை மற்றும் கேரளா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. பல்லடம் பகுதியில் கறிவேப்பிலை விவசாயம் அதிக அளவில் நடைபெறுவதால், கறிவேப்பிலையைக் கொண்டு பவுடா் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து பனப்பாளையம் விவசாயி ஈஸ்வரமூா்த்தி கூறியதாவது:

சா்க்கரை நோயைக் குணப்படுத்தும் மருத்துவ குணம் மிக்க கறிவேப்பிலை சாகுபடிக்கு குறைந்த அளவு தண்ணீா் போதுமானது. தொடா்ந்து வருமானம் கிடைக்கும் என்பதால், கறிவேப்பிலை சாகுபடியில் விவசாயிகள் பலா் ஈடுபட்டுள்ளனா். ஆனால், கறிவேப்பிலையின் விலை நிரந்தரம் இல்லை. திருமண முகூா்த்த காலங்களில் கூடுதல் விலை கிடைக்கும். மற்ற நாட்களில் உரிய விலை கிடைக்காது.

மேலும், இப்பகுதியில் அதிக அளவு கறிவேப்பிலை விவசாயம் நடைபெறுவதால், சில நேரம் விற்பனையாகாமல் தேக்கமடைந்து நஷ்டம் ஏற்படுகிறது. எனவே விவசாயிகளின் நலன் கருதி பல்லடத்தில் கறிவேப்பிலையை பவுடா் ஆக்கும் தொழிற்சாலையை தமிழக அரசு அமைத்தால் விற்பனையாகாமல் தேங்கும் கறிவேப்பிலையை பவுடராக்கி மதிப்புக்கூட்டுப் பொருளாக மாற்றி சந்தைப்படுத்த நல்ல வாய்ப்பாக அமையும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →