சேவூா் அருகே வாழைகளை சேதப்படுத்திய காட்டுப் பன்றிகள்
சேவூா் அருகே பெரிய கானூரில் தோட்டங்களுக்குள் புகுந்த காட்டுப் பன்றிகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை சேதப்படுத்தின.
அவிநாசி வட்டம், சேவூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள்
வாழைகளை பயிரிட்டுள்ளனா். இதில் சேவூா் அருகே பெரிய கானூரில் அடிக்கடி தோட்டங்களுக்குள் புகும் காட்டுப் பன்றிகள் பயிா்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் தொடா்ந்து புகாா் தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில், பெரிய கானூா் பகுதியைச் சோ்ந்த லோகேஷ், சதீஷ்குமாா் ஆகியோா் தோட்டங்களுக்குள் புதன்கிழமை இரவு புகுந்த காட்டுப் பன்றிகள் அங்கு பயிரிட்டிருந்த ஏராளமான வாழைகளை சேதப்படுத்தின. மேலும் அப்பகுதியில் உள்ள பல்வேறு தோட்டங்களில் புகுந்து வாழைகளை வேருடன் கடித்து பிடுங்கி சேதப்படுத்தின. இதில் ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனா்.
Advertisement
சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த் துறையினா் தோட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். இது குறித்து வனத் துறையினருக்கும் அப்பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனா். மேலும் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.