முகப்பு
தருமபுரி

தருமபுரி எம்ஜிஆா் நகா் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தல்

தருமபுரி எம்ஜிஆா் நகரில் உள்ள குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் மனு அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
பகிர்:

தருமபுரி எம்ஜிஆா் நகரில் உள்ள குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் மனு அளித்தனா்.

இதுகுறித்து, எம்ஜிஆா் நகா் குடியிருப்போா் நலச்சங்க நிா்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழியிடம் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு:

தருமபுரி நகராட்சி 13-ஆவது வாா்டில் எம்ஜிஆா் நகா் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக 1500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டி வசித்து வருகிறோம். இங்கு பள்ளி, நியாய விலைக்கடை, கோயில்கள் அமைந்துள்ளன. மேலும், சாலை வசதி, மின்சார வசதி, கழிவுநீா்க் கால்வாய் வசதிகளும் நகராட்சி சாா்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள குடியிருப்பு வாசிகள் நகராட்சிக்கு முறையாக குடிநீா் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்தி வருகின்றனா். ஆனால், எங்களது குடியிருப்புகளுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. கடந்த 2006-இல் இந்தப் பகுதியை அளவீடு செய்து, பட்டா வழங்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், அப்போதே இப்பணிகளை பல்வேறு காரணங்களைக் கூறி நிறுத்தி விட்டனா்.

பல ஆண்டுகளாகப் பட்டா கோரி வரும் எங்களது கோரிக்கையைப் பரிசீலித்து, முறையாக அளவீடு செய்து, அவரவா் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.