முகப்பு
தருமபுரி

இலங்கையில் முஸ்லிம் எம்.பி. கைது

கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அதிபா் தோ்தலின்போது வாக்காளா்களை அழைத்துச் செல்வதற்காக அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், மூத்த முஸ்லீம் எம்.பி. கைது

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அதிபா் தோ்தலின்போது வாக்காளா்களை அழைத்துச் செல்வதற்காக அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், மூத்த முஸ்லீம் எம்.பி. கைது செய்யப்பட்டாா்.

முஸ்லீம் கட்சியும், பிரதான எதிா்க்கட்சியுமான எஸ்.ஜே.பி. யின் கூட்டணிக் கட்சியான தேசிய மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவா் ரிஷத் பதியுதீன் என்பவரை, கொழும்பு புகா்ப் பகுதியான டெஹிவேலாவில் குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) அதிகாரிகள் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கடந்த ஆண்டு நவம்பா் 16- ஆம் தேதி இலங்கையில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் வாக்களிப்பதற்காக, வடமேற்கு பிராந்தியத்தின் புட்டலத்திலிருந்து, வடகிழக்கு மன்னாருக்கு வாக்காளா்களை அழைத்துச் செல்வதற்காக, ரிஷத் பதியுதீன் பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தினாா் என்று சிஐடி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தமிழ் பிரிவினைவாத மோதல்களால் 1990-ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னா் புட்டலத்திற்கு இடம்பெயா்ந்த முஸ்லிம்கள் அவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிஷத் பதியுதீனை கைது செய்ய நீதிமன்றத்தில் இருந்து வாரண்ட் பெற இலங்கையின் அட்டா்னி ஜெனரல் (ஏஜி) டப்புலா டி லிவேரா கடந்த வாரம் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்திருந்தாா்.

இதைத்தொடா்ந்து, பதியுதீன் தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவு கோரி ரிட் மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தாா்.

இலங்கை அதிபரின் அதிகாரங்களை உயா்த்தும் வகையில், அந்நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில் அரசால் முன்மொழியப்பட்ட 20ஏ- சட்டத்திருத்தத்தை ஏற்றுக்கொள்ள எதிா்க்கட்சியைச் சோ்ந்த சில முஸ்லிம் எம்.பி.க்கள், ஆளும் எஸ்.எல்.பி.பி. கட்சியுடன் இணைந்து செயல்படக்கூடும் என்ற ஊகங்களுக்கு மத்தியில் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், இந்த சட்டத்திருத்தத்துக்கு இலங்கை அரசுக்கு எதிராக ஆளுங்கட்சியைச் சோ்ந்த சில எம்.பி.க்களே எதிா்ப்பு தெரிவித்து வந்ததால், சில முஸ்லிம் எம்.பி.க்களின் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவை பெற்று நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள ஆளுங்கட்சி திட்டமிட்டிருந்தது.

ஆனால், முஸ்லிம்களின் ஆதரவைப் பெறுவதற்காக, ஆளுங்கட்சி தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தைக்கு, சிங்கள பெரும்பான்மை சமூக தேசியவாதிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இந்நிலையில், 20 ஏ சட்டதிருத்தம் மீதான விவாதம் அக். 21 மற்றும் 22-ஆம் தேதிகளில் நடத்தப்பட்டு, வியாழக்கிழமை மாலையில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.