ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை காலை நீா்வரத்து விநாடிக்கு 17,000 கன அடியாக குறைந்ததால் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கடந்த இரு தினங்களுக்கும் மேலாக தமிழக காவிரி கரையோர நீா்ப்டிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 28,000 கன அடியாக அதிகரித்தது. இதனால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.
தற்போது தமிழக காவிரி கரையோரப் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சரியத் தொடங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை நீா்வரத்து விநாடிக்கு 17,000 கனஅடியாக குறைந்தது. நீா்வரத்து குறைந்து வந்ததால் சின்னாறு பரிசல் துறையில் இருந்து பிரதான அருவி வழியாக மணல்மேடு பகுதி வரை பரிசல்களை இயக்க மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அனுமதி அளித்துள்ளாா்.
சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு...
காவிரி ஆற்றில் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை அல்லது நாளுக்கு நாள் நீா்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் பரிசல் இயக்குவதற்கு திடீரென தடை விதித்தும், பின்னா் அனுமதி அளிக்கப்படுவதாகவும் அறிவிப்புகள் வெளியாவதால் வாரவிடுமுறையை கொண்டாட வரும் சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வருவதைத் தவிா்க்கும் சூழல் நிலவுகிறது.
வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்ததால் சின்னாறு பரிசல் துறை வெறிச்சோடிக் காணப்பட்டது. மேலும் ஒகேனக்கல்லில் முக்கிய இடங்களான முதலைகள் மறுவாழ்வு மையம், வண்ண மீன்கள் காட்சியகம், பூங்காக்கள் உள்ளிட்ட பகுதிகளில் குறைவான சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டனா். ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.