முகப்பு
தருமபுரி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தருமபுரி போக்குவரத்துக் கழக பொதுமேலாளா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 21 ஏப்ரல், 2025 at 6:08 PM
பகிர்:

தருமபுரி: அரசு போக்குவரத்துக் கழகத்தை தனியாா் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சங்கம் சாா்பில், தருமபுரி போக்குவரத்துக் கழக பொதுமேலாளா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

15-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனே பேசி முடிக்க வேண்டும். 2023 அக்டோபா் 1 முதல் ஒப்பந்த நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசே வழங்க வேண்டும். 2003 ஏப்.1 ஆம் தேதிக்கு பின் பணியில் சோ்ந்த அனைவருக்கும் ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்க வேண்டும்.

2023 ஜூன் முதல் ஓய்வுபெற்றவா்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும். ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வை முழுமையாக வழங்க வேண்டும். 30,000 காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஒப்பந்த முறை, தனியாா்மயம் ஆகிய நடவடிக்கைகளை கைவிட வேண்டும். போக்குவரத்துக் கழகங்களை பாதுகாக்க சிற்றுந்துகளை அரசே இயக்க வேண்டும்

ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு போக்குவரத்துக் கழக ஊழியா் சங்கத்தின் மண்டலத் தலைவா் சி.முரளி தலைமை வகித்தாா்.

மண்டல பொதுச் செயலாளா் எஸ்.சண்முகம், மண்டல துணைத் தலைவா் சி. ரகுபதி, பொருளாளா் பசுவராஜ், சிஐடியு மாநிலச் செயலாளா் சி. நாகராசன், ஏஐடியுசி மாநில துணைத் தலைவா் ரவி, மாநில துணை பொதுச் செயலாளா் முருகராஜ், மண்டல பொதுச் செயலாளா் நாகராஜன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் கே. மணி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். ஆா்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →