நாமக்கல், நவ. 27: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலையை 15 காசுகள் குறைத்து ரூ.2.67 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் நிலவும் கடும் குளிர் நிலவுவதால், சில நாட்களுக்கு முன்பு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை வரலாறு காணாத அளவில் ரூ.2.90 ஆக உயர்ந்தது. பல நாள்களுக்கு இதே விலை நீடித்தது. பின்னர் 10 காசுகள் குறைந்து, ரூ.2.80 ஆக இருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 2 காசுகள் உயர்ந்து ரூ.2.82 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் விலை நிர்ணயக் குழுக் கூட்டம் நாமக்கல்லில் சனிக்கிழமை நடந்தது. பண்ணையாளர்கள், வியாபாரிகள் பங்கேற்ற இக் கூட்டத்தில், முட்டையின் விலையை 15 காசுகள் குறைத்து, ரூ.2.67 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இது குறித்து பண்ணையாளர்கள் கூறியது: வடமாநிலங்களில் குளிர்காலம் தொடங்கியுள்ளதால் முட்டையின் விலை நல்ல முன்னேற்றத்தைக் கண்டது. விலை உயர்ந்த நிலையில் முட்டையின் நுகர்வு குறையத் தொடங்கியது.
இதனால் விலை சரிந்துள்ளது. தில்லி, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய மண்டலங்களிலும் முட்டை விலை குறைந்து வருகிறது.
இதேபோல் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதாலும் முட்டை நுகர்வு பெருமளவுக்கு குறைந்து, விலை சரிந்துள்ளது என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.