முகப்பு
தருமபுரி

பெற்றோர்-ஆசிரியர் கழக விதிகளில் திருத்தம்: அரசியல்வாதிகளின் தலையீடு அதிகரிக்க வாய்ப்பு!

சேலம், ஜன. 2: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் செயல்படும் பெற்றோர் ஆசிரியர் கழக விதிகளில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தத்தால் இவ்வமைப்பில் அரசியல்வாதிகளின் தலையீடு அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகப் புகார்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 4:56 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 9:12 PM

சேலம், ஜன. 2: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் செயல்படும் பெற்றோர் ஆசிரியர் கழக விதிகளில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தத்தால் இவ்வமைப்பில் அரசியல்வாதிகளின் தலையீடு அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் வளர்ச்சிப் பணிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட பெற்றோர்-ஆசிரியர் கழகங்கள் (பி.டி.ஏ.) நாளடைவில் அரசியல்வாதிகளின் சங்கங்களாக மாறின.

இதன்மூலம் பள்ளி நிர்வாகங்களில் ஊடுருவிய சிலர், நிதி வசூல், நன்கொடை என்ற பெயரில் பணம் குவிக்கத் தொடங்கினர். இதனால் பெற்றோர்-ஆசிரியர் கழகப் பதவிகளைக் கைப்பற்ற ஆளுங்கட்சிப் பிரமுகர்களிடையே கடும் போட்டி நிலவி வந்தது.

Advertisement

இதையடுத்து பி.டி.ஏ. தலைவர்களாக சம்பந்தப்பட்ட பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோரே இருக்க வேண்டும் என்று திமுக ஆட்சிக் காலத்தில் புதிய விதி கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் பெற்றோர் அல்லாதவரும், கொடையாளர்களும் பி.டி.ஏ. தலைவராகலாம் என்று சில மாதங்களுக்கு முன்பு அதிமுக அரசு அறிவித்துள்ளது.

மாணவர்களின் பெற்றோர் பெரும்பாலும் ஏழைகளாகவே இருப்பதால் அவர்களால் பள்ளியின் வளர்ச்சிக்கு நிதி உதவி செய்ய முடிவதில்லை.

நிர்வாகச் சீர்கேடுகளைத் தட்டிக் கேட்கும் அளவுக்கு அவர்களிடம் விழிப்புணர்வும் இல்லை.

எனவேதான் விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது என்று கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனால், அரசின் புதிய உத்தரவு, பெற்றோரை முழுவதுமாக ஓரங்கட்டி பள்ளிகளில் மீண்டும் நன்கொடை வசூலுக்கு வழிவகுக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். பல இடங்களில் பெற்றோர்-ஆசிரியர் கழகப் பதவிகளைப் பிடிக்க ஆளுங்கட்சிப் பிரமுகர்களிடையே போட்டி நிலவுவது இதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

சேலம் மாவட்டம் எளம்பிள்ளை அருகேயுள்ள தைலாம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியின் பி.டி.ஏ. பொறுப்புகளைக் கைப்பற்ற இரு தரப்பினரிடையே அண்மையில் கடுமையான போட்டி ஏற்பட்டது.

அப்பள்ளியின் பி.டி.ஏ. தலைவராக உள்ள மு. வெங்கடாசலம் என்பவரை நீக்கிவிட்டு தன்னைத் தலைவராக்குமாறு, அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் மா. வெங்கடாசலம் என்பவர் தலைமை ஆசிரியர் மஞ்சுளாவுக்கு நெருக்குதல் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதற்காக உள்ளூர் அமைச்சரிடம் கடிதம் பெற்ற அவர், தனது தரப்பைச் சேர்ந்தவர்களுக்கே மற்ற பதவிகளையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினாராம்.

இதையடுத்து, மகுடஞ்சாவடி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மணி முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில், துணைத் தலைவர் என்ற புதிய பதவியை உருவாக்கி அதிமுக பிரமுகருக்கு வழங்குவது, அவரது ஆதரவாளர்கள் 14 பேருக்கு பொருளாளர், இணைச் செயலர் பதவிகளை வ3ழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

பள்ளியின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டுக்காகவுமே பி.டி.ஏ. அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதில் அரசியல்வாதிகள் ஆதிக்கம் செலுத்த முயல்வது அந்த நோக்கத்தையே சிதைப்பதாகும்.

எனவே, யாருடைய குறுக்கீடும் இல்லாத சுதந்திரமான பெற்றோர்-ஆசிரியர் அமைப்புகளை உருவாக்கி, பள்ளிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.