பாலக்கோடு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்
பாலக்கோடு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.
பாலக்கோடு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்திலுள்ள அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில், மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிகழாண்டுக்கான இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான விண்ணப்பத்தை மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கிப் பேசியது: தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை பல்தொழில்நுட்பக் கல்லூரி சுயநிதிக் கல்லூரியாக இருந்ததால் இங்கு பயிலும் மாணவர்கள் ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ.19,000 வரை செலுத்தி வந்தனர். ஏழை, எளிய மாணவர்கள் நலன்கருதி, இக் கல்லூரியை அரசு ஏற்று நடத்தும் என தமிழக அரசு அறிவித்தது.
இதனடிப்படையில் கடந்த ஜன.30 ஆம் தேதி நிகழ் கல்வி ஆண்டு முதல் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியாக மாற்றி, தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது. தற்போது, பெயர் மாற்றத்துக்காக மத்திய அரசின் சட்டப்பூர்வ அமைப்பான அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி குழுமத்திடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
எனவே, இக்கல்வி ஆண்டு முதல், நேரடி இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கையில் 300 பேரும், முதலாம் ஆண்டில் 360 பேரும் ஆண்டு கட்டணமாக தலா ரூ.2,000 மட்டுமே செலுத்தி தொழில் கல்வி பயிலலாம். 2017-18 ஆம் கல்வி ஆண்டில், முதலாம் ஆண்டு பயின்ற 196 மாணவர்களும், இரண்டாம் ஆண்டு பயின்ற 293 மாணவர்களும், 2018-19-ஆம் கல்வி ஆண்டில் ஆண்டு கட்டணமாக ரூ.2000 செலுத்தி தொழில் கல்வி பயிலலாம்.
அதேபோல, நிகழ் கல்வி ஆண்டில் கல்லூரியில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள், இலவசப் பேருந்து பயண அட்டை மற்றும் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். எனவே இந்த வாய்ப்பை நல்ல முறையில் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கே.வி.அரங்கநாதன், மேலாண் இயக்குநர் கே.கற்பகம், வருவாய் கோட்டாட்சியர் ராமமூர்த்தி, கல்லூரி முதல்வர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.ன