மான் வேட்டை : இருவருக்கு ரூ. 2 லட்சம் அபராதம்
அரூர் அருகே மான் வேட்டையாடிய இருவருக்கு ரூ. 2 லட்சம் அபராதம் திங்கள்கிழமை விதிக்கப்பட்டது.
அரூர் அருகே மான் வேட்டையாடிய இருவருக்கு ரூ. 2 லட்சம் அபராதம் திங்கள்கிழமை விதிக்கப்பட்டது.
அரூர் வட்டம், கீழ்மொரப்பூர் காப்புக்காடு வெள்ளைக்குட்டை பகுதியில் மொரப்பூர் வனச்சரகர் தீ.கிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வனப்பகுதியில் மர்ம நபர்கள் 2 பேர் சுற்றித் திரிவது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் சேலம் மாவட்டம், வழியங்காடு கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் லட்சுமணன் (37), அய்யம்பெருமாம்பட்டியைச் சேர்ந்த குள்ளப்பன் மகன் சிவசாமி (29) என்பதும், இவர்கள் உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கியால் ஒரு பெண் புள்ளி மானை வேட்டையாடியதும் தெரியவந்தது. இதையடுத்து, பிடிப்பட்ட இருவரையும் வனத் துறையினர் தருமபுரி மாவட்ட வன அலுவலர் க.திருமால் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, வன விலங்குகளை வேட்டையாடிய குற்றத்துக்காக லட்சுமணன், சிவசாமி ஆகிய இருவருக்கும் தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டார்.