முகப்பு
தருமபுரி

விவசாய மேம்பாட்டு திட்டங்களுக்கு முன்னுரிமை: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

தமிழகத்தில் விவசாயம் சார்ந்த நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கே மாநில அரசு முன்னுரிமை அளிக்கும்

Updated On : 8 அக்டோபர் 2018, 8:37 am IST
பகிர்:

தமிழகத்தில் விவசாயம் சார்ந்த நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கே மாநில அரசு முன்னுரிமை அளிக்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம், அரூரில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முன்னாள் எம்பி அரூர் ஆர்.முத்துக்கவுண்டரின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளை பொருள் விவசாயிகள் நல உரிமைப் பாதுகாப்புச் சங்க துணைத் தலைவர் வி.ராஜாராம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி வரவேற்றார்.  விழாவில், ஆர்.முத்துக்கவுண்டரின் வாழ்க்கை வரலாறு நூலை வெளியிட்டு, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
பேசியது :
தமிழகத்தில் மழை நீரை சேமிக்கவும், ஏரி, குளங்கள், குட்டைகள், நீர்த்தேக்கங்களுக்கு வரும் நீர்வரத்து கால்வாய்களை தூய்மை செய்தல், நீர்த்தேங்கங்கள் மற்றும் அணைக்கட்டுகளைப் பராமரித்தல், தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளுக்காக தமிழக அரசு நிகழாண்டு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.  இதேபோல், விவசாய விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவும், விதைகள், விவசாய நிலம் மேம்பாடு, விவசாயிகளுக்கு தேவையான கூட்டுறவு கடனுதவிகள், பாசன வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது. தமிழகம் மின் வெட்டு இல்லாத மாநிலமாக மாறியுள்ளது. முன்னாள் எம்பி அரூர் ஆர்.முத்துக்கவுண்டர் தனது வாழ்நாள் முழுவதும் விவசாயிகளின் நலனுக்காகவே பாடுபட்டுள்ளார் என்றார்.
அரூர் ஆர்.முத்துக்கவுண்டரின் உருவப்படத்தைத் திறந்து வைத்து தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி பேசியது :
 காவிரி ஆற்றில் பருவ மழைக்காலங்களில் ஓடும் மிகை நீரை தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் நிரப்புவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. 
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர். அவருக்கு விவசாயிகளின் துயரங்கள் குறித்து நன்றாக தெரியும். எனவே, விவசாயிகளின் மேம்பாட்டுக்கான திட்டங்களை தமிழக அரசு  விரைவாக செயல்படுத்தும். 
மறைந்த ஆர்.முத்துக்கவுண்டர், அரசுப் பணியிலிருந்து விலகி, மக்களின் பொதுச் சேவைக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்தார். நாடாளுமன்றத்தில் விவசாயிகளின் நலனுக்காகவே அதிகம் பேசியுள்ளார் என்றார்.
விழா அறிமுக உரை நிகழ்த்திய மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியது : 
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நீர்ப்பாசன திட்டங்கள், கல்வி நிலையங்கள், தொழில்சாலைகள் உருவாகுவதற்கு முக்கிய பங்காற்றியவர் முத்துக்கவுண்டர்.  இவர், பெரியார், அண்ணா அவர்களின் வழிகாட்டுதல்படி, சிறந்த பேச்சாளராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தவர். தமது வாழ்க்கையை உழவர்களின் நலனுக்காவே அர்ப்பணித்தார். இவரது பெரும் முயற்சியால் பாப்பிரெட்டிப்பட்டியில் வாணியாறு நீர்த்தேக்கம், ஊத்தங்கரையில் பாம்பாறு நீர்த்தேக்கம் அமைந்தது என்றார்.
 விழாவில் விவசாய  குடும்பங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு  கல்வி உதவித்தொகைகளை எம். பிரேமா முத்துக்கவுண்டர்  வழங்கினார். தொடர்ந்து, விவசாயிகள் சங்க மூத்த தலைவர்களையும், முத்துக்கவுண்டருடன் இணைந்து பணியாற்றிய பெரியோர்களுக்கும் விழாவில் கெளரவிக்கப்பட்டனர்.   
விழாவில் முன்னாள்  அமைச்சர்கள் வ.முல்லைவேந்தன், சி.பொன்னையன், முன்னாள்  எம்பிகள் சி.கே.குப்புசாமி, எஸ்.கே.கார்வேந்தன்,  பால் உற்பத்தியாளர்கள்  நலச் சங்கத் தலைவர் கே.ஏ.செங்கோட்டுவேல், சிலம்பொலி செல்லப்பன், ஓய்வுப்  பெற்ற ஐபிஎஸ்  அதிகாரி  வி.சி.பெருமாள், தமிழ்நாடு கரும்பு உற்பத்தியாளர்கள் சம்மேளன தலைவர்  எம்பாவை. யோகநாதன், ஜெம் குழுமத்தின் தலைவர் ஜெம் ஆர்.வீரமணி, பண்ணாரி அம்மன்  குழுமத்தின் தலைவர் எஸ்.வி.பால சுப்பிரமணியம்,   தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் சொல்லேர் உழவன்  செல்லமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மேலும், கொங்கு வேளாளர் சங்க கூட்டமைப்பின்   பொதுச்செயலர் பி.டி.ராஜமாணிக்கம், கொங்குநாடு  முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் பெஸ்ட் எஸ். ராமசாமி, கமலம் கோவை செழியன், கொங்கு  பேரவையின் தலைவர் ஆர்.தேவராசன், தொழிலதிபர் எஸ்.என்.தியாகராஜன், மேலாளர் பூபதி சீனிவாசன் உள்ளிட்டோரும் வாழ்த்துரை வழங்கினர்.
முத்துக்கவுண்டரின் வாழ்க்கை வரலாறு நூலாசிரியர்  முனைவர் மணிமேகலை புஷ்பராஜ் நூல் ஏற்புரை நிகழ்த்தினார். அரூர் அம்மன் கிரானைட்ஸ்  நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முத்து ராமசாமி  நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.