வாகன காப்பீட்டு விவகாரம்: சிபிசிஐடி போலீஸாருக்கு உத்தரவு
விபத்து ஏற்படுத்திய இருசக்கர வாகனத்துக்கான காப்பீட்டின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீஸாருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விபத்து ஏற்படுத்திய இருசக்கர வாகனத்துக்கான காப்பீட்டின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீஸாருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த பள்ளி மாணவர் காவிய அரசன் மீது கடந்த 2009 -ஆம் ஆண்டு இருசக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் மாணவன் காயமடைந்தார். இந்த நிலையில், மாணவரின் தந்தை ரூ.5 லட்சம் இழப்பீடு கோரி அரூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகனம் தங்களுடைய காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 500 இழப்பீடாக வழங்க தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் காப்பீட்டு நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இருசக்கர வாகனத்துக்கான காப்பீடு போலியானது என தனியார் காப்பீட்டு நிறுவனம் ஆதாரங்களைத் தாக்கல் செய்தது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விபத்து ஏற்படுத்திய இருசக்கர வாகனத்துக்கான காப்பீட்டின் உண்மைத்தன்மை குறித்து, தருமபுரி மாவட்ட சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வரும் 29 -ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.