கடத்தூரில் உலக ஓட்டுநர் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூர் பேருந்து நிலைய வளாகத்தில், நகர வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நலச் சங்கம் சார்பில் உலக ஓட்டுநர் தின விழா நடைபெற்றது.
விழாவில், இருசக்கரம் ஓட்டுவோர் தலைக்கவசம் அணிய வேண்டியதின் அவசியம், கார் ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணிவதால் ஏற்படும் நன்மைகள், சாலை விதிகள், விபத்துகளைத் தடுப்பதற்கான
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் பேசினார்.
விழாவில் வயது முதிர்ந்த வாகன ஓட்டுநர்களுக்கு பொன்னாடைகள் போர்த்தி, பரிசுப் பொருள்கள் வழங்கி பாராட்டினார்.
முன்னதாக, சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறித்த ஊர்வலம் நடைபெற்றது. இதில், வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். இந்த விழாவில்,
கடத்தூர் காவல் ஆய்வாளர் கே.சரவண குமரன், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நலச் சங்க துணைச் செயலர் ஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.