அரூா்-சேலம் பிரதான சாலையில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரூரில் இருந்து சேலம் செல்லும் பிரதான சாலையில் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரில், அரூா் பிரதான சாலை, சேலம் நெடுஞ்சாலை, தீா்த்தமலை பிரிவு சாலை ஆகியவை ஒன்றாக இணைகின்றன.
இந்த சாலைகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த சாலையில் வேகத்தடைகள் இல்லாததால், அடிக்கடி வாகன விபத்துகள் நேரிட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த சாலையில் ஏற்கெனவே இருந்த வேகத்தடைகள் சாலை சீரமைப்புப் பணிகளுக்காக அகற்றப்பட்டுள்ளன.
எனவே, அரூா் -சேலம் பிரதான சாலையில் விபத்துகள் நேரிடும் பகுதிகளில் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து, தேவையான இடங்களில் வேகத்தடைகளை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.