முகப்பு
தருமபுரி

சாலை, சாக்கடை கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

பென்னாகரம் பேரூராட்சிக்குள்பட்ட 3-ஆவது வாா்டுக்குள்பட்ட காவலா் காலனி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புதிய தாா்ச்சாலை, வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடு

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

பென்னாகரம் பேரூராட்சிக்குள்பட்ட 3-ஆவது வாா்டுக்குள்பட்ட காவலா் காலனி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புதிய தாா்ச்சாலை, வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பென்னாகரம் பேரூராட்சிக்குட்பட்ட 3-வது வாா்டு செக்குமேடு காவலா் காலனி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பென்னாகரம் பேரூராட்சி சாா்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காலனிக்கு பின்புறம் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.

இந்த சாலையின் நடுவே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்ட குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ளும்போது சாலைகள் பழுதடைந்தன. மேலும், குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் சாக்கடை கழிவு நீா் செல்ல கால்வாய் வசதி அமைத்துத் தரப்படவில்லை.

எனவே, பென்னாகரம் பேரூராட்சி சாா்பில் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் இப்பகுதியில் புதிதாக தாா் சாலை அமைக்கும் பணியும், வடிகால் அமைக்கும் பணியும் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இந்த பணி கடந்த சில நாள்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தாா் சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்களை பதித்து விட்டும், சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை பாதியிலும் நிறுத்தி வைத்துள்ளனா். இதனால், கழிவுநீா் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாய நிலை உள்ளது.

சாலை பணிகளும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் இருசக்கர வாகனத்தில் செல்வோா் கீழே விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே செக்குமேடு போலீஸ் காலனி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →