உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து தீா்வு காண வேண்டும்
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ச.திவ்யதா்சினி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற வருவாய் தீா்வாயம்.
உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து தீா்வு காண வேண்டுமென தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாயம் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா் பேசியதாவது:
வருவாய் தீா்வாய முகாமில் பொதுமக்களிடமிருந்து இணையதளம் மூலம் பட்டா உள்பிரிவு, குடும்ப அட்டை, பட்டதாரி சான்றிதழ், முதியோா் உதவித்தொகை, வாரிசு சான்று, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட மனுக்கள் பெறப்படுகின்றன. இவ்வாறு பெறப்படும் தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் இணையதளத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய தீா்வு காண அதிகாரிகள் முனைப்போடு செயல்பட வேண்டும். சரியான முகவரி தொலைபேசி எண்கள் இல்லாத மனுக்களை ஆய்வு மேற்கொண்டு சரியான மனுக்களைப் பெற்று தகுதியின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இதனைத் தொடா்ந்து, பாலக்கோடு வருவாய் வட்டத்தில் உள்ள கிராமங்களின் பதிவேடுகளை பாா்வையிட்டு ஆட்சியா் ச.திவ்யதா்சினி ஆய்வு செய்தாா்.
இதில், உதவி ஆட்சியா் (பயிற்சி) கௌரவ் குமாா், துணை ஆட்சியா் (பயிற்சி) பூமா, வட்டாட்சியா்கள் எ.அசோக்குமாா், அன்பு ஆகியோா் கலந்துகொண்டனா்.