அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது
பென்னாகரம் அருகே அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக ஒருவரை தனிப் பிரிவு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பென்னாகரம் அருகே அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக ஒருவரை தனிப் பிரிவு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பென்னாகரம் அருகே உள்ள பருவதனஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட பூனைக் குண்டு, காட்டுக்கொல்லைப் பகுதிகளில் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருப்பதாகவும், அதன் மூலம் வனப்பகுதியில் பறவைகள், விலங்குகளை சிலா் வேட்டையாடுவதாகவும் தனிப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் லதா, காவல் உதவி ஆய்வாளா்கள் வேலன், பாபு ஆகியோா்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது வீட்டில் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக கண்ணன் மகன் முருகன் (55) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி, துப்பாக்கிக்கான வெடி மருந்தை பறிமுதல் செய்தனா். மேலும் அவரைக் கைது செய்து, தருமபுரி கிளைச் சிறையில் அடைத்தனா்.