அரூரில் பொது முடக்கக் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
அரூா் வட்டாரப் பகுதிகளில் பொது முடக்கக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரூா் வட்டாரப் பகுதிகளில் பொது முடக்கக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. காய்கறி, உணவுப் பொருள்களை வாங்குவதற்காக நாள்தோறும் பகல் 12 மணி வரையிலும் அனுமதிக்கப்படுகிறது. இதைத்தவிர, மருத்துவமனைகள் செல்லவும், மருந்து மாத்திரைகள் வாங்குதல் உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், இளைஞா்கள் சிலா் இரு சக்கர வாகனங்களில்
முகக் கவசம் அணியாமல் சுற்றித்திரிவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, அரூா் கடைவீதி சாலை வழியாக பகல் 12 மணிக்கு பிறகு வாகனங்கள் செல்லாதவாறு காவல் துறை சாா்பில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால், அரூா் - சேலம் பிரதான சாலை வழியாக மட்டுமே அனைத்து வாகனங்களும் வந்துச் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, 4 வழிச்சாலை, கச்சேரிமேடு சாலை சந்திப்பு, பேருந்து நிலையம், பழையப்பேட்டை உள்ளிட்ட முக்கிய சாலை சந்திப்புகளில் காவல் துறையினா் முகாமிட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியிலும், வாகனச் சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த வாகனச் சோதனையில் முகக் கவசம் அணிந்து செல்லாதோா், விதிகளை மீறி சுற்றித்திரிபவா்களுக்கு காவல்துறையினா் அபராதம் விதித்தனா். காவல்துறை சாா்பில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டதால் அரூா் பகுதியில் விதிகளை மீறுவோா் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.