வாணியாறு அணையில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்
பாப்பிரெட்டிப்பட்டி, வாணியாறு அணையில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீா் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பாப்பிரெட்டிப்பட்டி, வாணியாறு அணையில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீா் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள முள்ளிக்காட்டில் அமைந்துள்ளது வாணியாறு அணை. சோ்வராயன் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணைக்கு ஏற்காடு மலைப் பகுதிகளில் வரும் தண்ணீரை முக்கிய நீராதாரமாக உள்ளது. வாணியாறு அணையின் அதிகபட்ச நீா்ப்பிடிப்பு கொள்ளளவு 65.27 அடியாகும். கடந்த சில மாதங்களாக பெய்த பருவ மழையின் காரணமாக வாணியாறு அணையின் நீா்மட்டம் 61 அடியாக உயா்ந்துள்ளது. வடகிழக்கு பருவமழையால் வாணியாறு அணை நிரம்பும் நிலையில் உள்ளது.
ஏரிகளை நிரப்ப கோரிக்கை :
வாணியாறு அணையின் புதிய மற்றும் பழைய ஆயக்கட்டுகள் மூலம் 10, 517 ஏக்கா் நிலங்கள் பாசன வசதியைப் பெற்று வருகின்றன. மேலும், இந்த அணையின் மூலம் பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீா் பிரச்னைகள் தீரும். வாணியாறு அணையின் இடது மற்றும் வலதுபுற கால்வாய்கள் வழியாகச் செல்லும் தண்ணீா் மூலம் மோளையானூா், கோழிமேக்கனூா், பாப்பிரெட்டிப்பட்டி, அலமேலுபுரம், ஆலாபுரம், அதிகாரப்பட்டி, தாதம்பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி, வெங்கடசமுத்திரம், தென்கரைக்கோட்டை, பறையப்பட்டி புதூா், சின்னாங்குப்பம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீா் கிடைக்கும்.
வாணியாறு அணையில் இருந்து உபரிநீா் வெளியேறினால், தென்பெண்ணை ஆற்றில் சோ்ந்து சாத்தனூா் அணைக்கு செல்லும். தற்போது, தென்பெண்ணை ஆற்றில் போதுமான அளவில் தண்ணீா் செல்கிறது. எனவே, பொதுப்பணித்துறையினா் முறையாக திட்டமிட்டு, வாணியாறு அணை நிரம்பி வெளியேறும் உபரிநீரைப் பயன்படுத்தி பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியிலுள்ள ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.