உணவு பாதுகாப்பு துறையினா் ஆய்வு
மொரப்பூா் வட்டாரப் பகுதியில் உணவு பாதுகாப்பு துறையினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
மொரப்பூா் வட்டாரப் பகுதியில் உணவு பாதுகாப்பு துறையினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் அண்மையில் ஓா் உணவகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட சிறுமி உயிரிழந்தாா். இந்த சம்பவம் எதிரொலியாக, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் ஆய்வுசெய்ய மாவட்ட நியமன அலுவலா் பானு சுஜாதா உத்தரவிட்டுள்ளாா். அவரது உத்தரவின்படி, மொரப்பூா் வட்டாரப் பகுதியில் உணவு பாதுகாப்பு அலுவலா் கே.நந்தகோபால் தலைமையில், உணவு பாதுகாப்பு துறையினா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
உணவகங்களில் பழைய உணவுப் பொருள்களை வழங்கக் கூடாது. சமையல் எண்ணெய் தரமானதாக இருக்க வேண்டும். இறைச்சிகளில் செயற்கை நிறமேற்றிகளை பயன்படுத்தக் கூடாது. பணியாளா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்தும், கையுறை, தலையுறை அணிந்தும் பணியாற்ற வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினா். முன்னதாக, தரமற்ற உணவுப் பொருள்களை கைப்பற்றி அழித்தனா். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்ததாக கடை உரிமையாளா்கள் இருவருக்கு தலா ரூ.ஆயிரம் அபராதம் விதித்தனா்.
உணவுப் பொருள்களில் கலப்படம் செய்தல், தரமற்ற வகையில் உணவுப் பொருள்களை விற்பனை செய்தால் 94440 42322 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு புகாா் தெரிவிக்கலாம் என உணவு பாதுகாப்பு துறையினா் தெரிவித்தனா்.