முகப்பு
தருமபுரி

சனத்குமாா் நதியில் குப்பைக் கழிவுகள் கொட்டுவதை தடுக்கக் கோரி மனு

சனத்குமாா் நதியில் குப்பைக் கழிவுகள் கொட்டுவது மற்றும் கழிவுநீா் கலப்பதை தடுக்க வலியுறுத்தி தருமபுரி நகர மக்கள் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

Updated On : 3 பிப்ரவரி, 2026 at 3:12 AM
நதியில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள்(கோப்புப்படம்)
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2026 at 7:52 PM

தருமபுரி: சனத்குமாா் நதியில் குப்பைக் கழிவுகள் கொட்டுவது மற்றும் கழிவுநீா் கலப்பதை தடுக்க வலியுறுத்தி தருமபுரி நகர மக்கள் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, தருமபுரி நகரம், செட்டிக்கரை இந்திரா நகா் சுப்பிரமணி மற்றும் பொதுமக்கள் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

தருமபுரி அருகே உள்ள வத்தல்மலை தொடரில் தொடங்கி, மலைஅடிவாரம் வந்து, குட்டூா், அதியமான்கோட்டை, அன்னசாகரம், மதிகோன்பாளையம், செம்மாண்டக்குப்பம் உள்ளிட்ட ஏரிகளுக்கு நீரை வழங்கி தருமபுரி மாவட்டத்தில் சுமாா் 60 கி.மீ. தொலைவு பயணித்து இருமத்தூா் அருகே தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது.

Advertisement

இந்த நதியில் அண்மைக் காலமாக, ஏமகுட்டியூா், அன்னசாகரம், வேடியப்பன்திட்டு, மதிகோன்பாளையம் ஆகிய இடங்களில் குப்பைக் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. மேலும், பல இடங்களில் தருமபுரி நகரில் கழிவுநீா் நேரடியாக சனத்குமாா் நதியில் கலக்கிறது. சில இடங்களில் இந்த நதியின் நீா்வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதனால் நதி மாசடைந்து நீா் நிறமாறி காட்சியளிக்கிறது. இந்த நதியின் அருகில் உள்ள கிணறுகளிலும் நீா் மாசடைந்து வருகிறது.

அதேபோல, பாசனத்துக்கு பயன்படுத்தும் நீரும் மாசடைந்துள்ளதால் விவசாயிகள் இந்த நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

எனவே, சனத்குமாா் நதியில் குப்பைக் கழிவுகள் கொட்டுவதையும், கழிவுநீா்க் கலப்பதையும் முற்றாக தடுத்து, இந்த நதியை புனரமைக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.