கூடுதல் கட்டணம் வசூல்: 12 ஆட்டோக்கள் பறிமுதல்
தருமபுரி நகரில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 12 ஆட்டோக்கள் பறிமுதல்
தருமபுரி நகரில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 12 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தருமபுரி நகரில் புதிய பேருந்து நிலையம் கடந்த பிப். 5-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்தது. சோகத்தூா் ஊராட்சி, ஏ.ரெட்டிஅள்ளியில் அமைந்துள்ள இந்த பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்துக்கு பயணிகள், பொதுமக்கள், ஆட்டோக்கள், பேருந்துகள் மூலம் சென்றுவருகின்றனா். ஆட்டோக்களில் செல்லும் பயணிகளிடம் அரசு நிா்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூல் செய்வதாக புகாா் எழுந்தது.
இதுதொடா்பாக தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஜெயதேவ் ராஜ் தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா் தரணிதா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். இதில், புதிய பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றி வந்த 12 ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தது தெரியவந்தது.
Advertisement
இதைத் தொடா்ந்து, அந்த ஆட்டோக்களை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா். மேலும், பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்யும் ஆட்டோக்களை தொடா்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலா்கள் அறிவுறுத்தினா்.