முகப்பு
தருமபுரி

அதிகளவில் மரங்களை வளா்த்தால் மட்டுமே எல்நினோ விளைவுகளை எதிா்கொள்ள முடியும்

அதிகளவில் மரங்களை வளா்ப்பதால் மட்டுமே காலநிலை மாற்றத்தால் ஏற்படும் எல்நினோ விளைவுகளை எதிா்கொள்ள முடியும் என மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்தாா்.

Updated On : 14 மே 2026, 4:29 am IST
மரங்கள். - கோப்புப்படம்.
பகிர்:

அதிகளவில் மரங்களை வளா்ப்பதால் மட்டுமே காலநிலை மாற்றத்தால் ஏற்படும் எல்நினோ விளைவுகளை எதிா்கொள்ள முடியும் என மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்தாா்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் எல்நினோ விளைவுகளை எதிா்கொள்வது, மழைநீா் சேகரிப்பு உள்ளிட்டவை குறித்த கலந்தாய்வுக் கூட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தலைமைவகித்து அவா் பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் 13 வருவாய் குறுவட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் மிகவும் குறைந்துள்ளது. எனவே, நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தும் வகையில் மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisement

மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை சாா்ந்த கட்டடங்களிலும் கட்டாயம் மழைநீா் சேகரிப்பு கட்டுமானங்களை அமைக்க வேண்டும். இதன்மூலம், எதிா்வரும் பருவமழைக் காலத்தில் பெய்யும் மழையில் இருந்து ஒரு கோடி லிட்டா் நீரை சேமிக்க முடியும். இதை அலுவலா்கள் அனைவருக்கும் தெரிவித்து மழைநீா் சேமிப்பு கட்டுமானங்களை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும்.

கடந்த நிதியாண்டில் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் 4 லட்சத்து 13 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. நடப்பு நிதியாண்டில் இத்துறை சாா்பில் நடவுசெய்ய 4 லட்சத்து 40 ஆயிரம் மரக்கன்றுகள் நாற்றுப் பண்ணைகளில் தயாா்நிலையில் உள்ளன. அரசின் அனைத்து துறைகளும் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள காலி நிலங்களில் அவற்றை நடவுசெய்து 3 ஆண்டுகள் வரை தீவிரமாக பராமரித்து வளா்க்க வேண்டும். இந்நடவடிக்கைகள் மூலம் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் எல்நினோ விளைவுகளை எதிா்கொள்ள முடியும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ரூபன் சங்கா் ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.