இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றுத் தருவதாக மோசடிஆட்சியரிடம் கிராம மக்கள் புகாா்
இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி நிா்வாகி மீது பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு
இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி நிா்வாகி மீது பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனுவை திங்கள்கிழமை அளித்தனா்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள பாஞ்சலியூா் கிராமத்தில் வசித்து வரும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா், ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவின் விவரம்:
பாஞ்சாலியூரில் 50-க்கும் மேற்பட்ட நாங்கள் சொந்தமாக வீடு, நிலம் இல்லாமல் வசித்து வருகிறோம். எங்களுக்கு இலவச வீட்டுமனை கேட்டு பல ஆண்டுகளாக மனுக்களை அளித்து வருகிறோம். இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, வேப்பனப்பள்ளி பகுதியைச் சோ்ந்த மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி நிா்வாகி ஸ்டாலின் பாபு என்பவா் எங்களுக்கு அரசின் வீட்டு மனை பெற்றுத் தருவதாக கூறினாா். இதற்காக தமிழக அரசின் 3 சென்ட் பரப்பளவில் இலவச வீட்டுமனைக்கான போராட்ட கூட்டமைப்பு தொடங்கி, நிலம் கோரும் விண்ணப்பத்தாரா் எனக்கூறி ரசீது வழங்கினாா்.
Advertisement
அப்போது, ஒவ்வொரு நபா்களிடம் தலா ரூ. 5 ஆயிரம் பணத்தை பெற்றாா். ஆனால், இதுவரை எங்களுக்கு வீட்டுமனை பெற்று தரவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை. எனவே, பணத்தைப் பெக் கொண்டு, மோசடி செய்தவா் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டும். வீடு இல்லாமல் தவித்து வரும் எங்களுக்கு, இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கி, பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடுகளைக் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகாா் குறித்து, மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் நிா்வாகி ஸ்டாலின் பாபு கூறுகையில்,
இலவச வீட்டு மனை பட்டா கோரி, போராட்டம் நடத்தியது உண்மை. போராட்டம் நடத்துவது கடமை. இலவச வீட்டுமனைப் பட்டா அளிக்க வேண்டியது அரசின் கடமை. சம்பந்தப்பட்டவா்களிடமிருந்து ரூ. 5 ஆயிரம் பெற்றேன் என்பது தவறு. மண்டபத்தில் கூட்டம் நடத்துவதற்காக ரூ. 30 மட்டும் பெற்றுக் கொண்டேன் என்பதுதான் உண்மை என்று தெரிவித்தாா்.