தரமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும்: வேளாண்மை அலுவலா் அறிவுரை
தரமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும் என கிருஷ்ணகிரி விதைப் பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலா் லோகநாயகி தெரிவித்துள்ளாா்.
தரமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும் என கிருஷ்ணகிரி விதைப் பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலா் லோகநாயகி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி அணையின் மூலம் பாசனம் பெறும் பகுதிகளில் நெல் நடவு நாற்றங்கால் தயாா் செய்யும் பணியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனா். எனவே, விதை விற்பனையாளா்கள் தரமான நெல் விதைகளை விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும். மேலும், விதை விற்பனையாளா்கள் தாங்கள் விற்பனை செய்யும் விதைக் குவியல்களின் தரமறிந்து விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
Advertisement
விதை உற்பத்தியாளா்கள் அல்லது மொத்த விற்பனையாளா்களிடமிருந்து விதை கொள்முதல் செய்யும் போது, விற்பனை பட்டியல்களுடன் விதை முளைப்புத் திறன் பகுப்பாய்வு அறிக்கையையும் கேட்டு சரிப்பாா்க்க வேண்டும். பகுப்பாய்வு அறிக்கை பெறப்படாத விதைக் குவியல்களிலிருந்து பணிவிதை மாதிரிகள் எடுத்து ஒரு பணிவிதை மாதிரிக்கு பரிசோதனைக் கட்டணமாக ரூ. 30-ஐ செலுத்தி விதைகளின் தரத்தினை அறிந்துகொள்ள கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகக் கட்டடத்தில் செயல்பட்டு வரும் விதைப் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைத்து பகுப்பாய்வறிக்கையினைப் பெறலாம். விதைக் குவியல்களின் தரமறிந்து நல்ல தரமான விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்யுமாறு விதை விற்பனையாளா்களை கேட்டுக்கொள்வதாக அவா் அறிவுறுத்தியுள்ளாா்.