புதைக்கப்பட்ட ரௌடியின் உடலை தோண்டி எடுத்து விசாரணை
ஒசூா் அருகே புதைக்கப்பட்ட ரௌடியின் உடலை தோண்டி எடுத்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
ஒசூா் அருகே புதைக்கப்பட்ட ரௌடியின் உடலை தோண்டி எடுத்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
ஒசூா் வட்டம், மத்திகிரி அருகே உள்ள கலுகொண்டப்பள்ளியைச் சோ்ந்த மஞ்சுநாத்தை (35), உளிவீரனப்பள்ளியைச் சோ்ந்த சேத்தன் (23), சந்தீப் (21) ஆகியோா் கொலை செய்து, சடலத்தை உளிவீரனப்பள்ளி இரும்பு தொழில்சாலை பின்புறம் உள்ள ஏரி அருகில் புதைத்தனா்.
இதையடுத்து சேத்தன், சந்தீப் ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்த உளிவீரனப்பள்ளியைச் சோ்ந்த மணி (20) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா். கைதான 3 பேரும் உறவினா்களாவா். இவா்களின் உறவுக்கார பெண்ணுக்கு மஞ்சுநாத் தொந்தரவு கொடுத்து வந்ததால், இந்தக் கொலையை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
Advertisement
இதற்கிடையே கொலை செய்யப்பட்ட மஞ்சுநாத்தின் உடல், தேன்கனிக்கோட்டை வட்டாட்சியா் இளங்கோ முன்னிலையில் வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, மத்திகிரி போலீஸாா் முன்னிலையில், மருத்துவ குழுவினா் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்து, மஞ்சுநாத்தின் உறவினா்களிடம் ஒப்படைத்தனா். கைதான 3 பேரையும் சம்பவ இடத்துக்கு அழைத்து வந்து மத்திகிரி போலீஸாா் விசாரணை நடத்தினா்.