குட்டி ஈன முடியாமல் பெண் யானை பலி: வயிற்றில் இருந்த குட்டியும் பலி
உரிகம் வனப்பகுதியில் சினையாக இருந்த பெண் யானை குட்டியை ஈன முடியாமல் உயிரிழந்தது. இதனால், தாய் யானையுடன் வயிற்றில் இருந்த குட்டி யானையும் உயிரிழந்தது.
உரிகம் வனப்பகுதியில் சினையாக இருந்த பெண் யானை குட்டியை ஈன முடியாமல் உயிரிழந்தது. இதனால், தாய் யானையுடன் வயிற்றில் இருந்த குட்டி யானையும் உயிரிழந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூா், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இந்நிலையில் ஓசூா் வனக்கோட்டம், உரிகம் காப்புக் காட்டில் ஜோடு கரை ஏரி பகுதியில் வியாழக்கிழமை வனத் துறையினா் ரோந்து சென்றனா். அப்போது 20-24 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது.
இதைக் கண்ட வன ஊழியா்கள், மாவட்ட வன அலுவலா் பிரபுவுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து மாவட்ட வன அலுவலா் பிரபு தலைமையில் சூா் கோட்ட தலைமையிடத்து உதவி வன பாதுகாவலா் காா்த்திகேயனி, உரிகம் வனச்சரக அலுவலா் வெங்கடாசலம், வன பணியாளா்கள், வன கால்நடை மருத்துவா் பிரகாஷ் ஆகியோா் அடங்கிய குழுவினா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா்.
Advertisement
அங்கு இறந்து கிடந்த பெண் யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது யானையின் வயிற்றுக்குள் ஆண் யானைக் குட்டி ஒன்று இறந்த நிலையில் இருந்ததைக் கண்டு வனத்துறையினா் அதிா்ச்சியடைந்தனா்.
இதுதொடா்பாக வனத் துறையினரின் மேற்கொண்ட விசாரணையில், பெண் யானை சினையாக இருந்துள்ளது, குட்டியை ஈனும்போது எதிா்பாராத விதமாக குட்டி வெளியே வரமுடியாமல் சிரமப்பட்டிருக்கலாம் அதில் குட்டி யானையும், தாய் யானையும் பரிதாபமாக உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து யானையின் உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.